Published : 18 Nov 2020 10:24 AM
Last Updated : 18 Nov 2020 10:24 AM

பத்திரமாக உள்ளேன்; முருகக் கடவுள் காப்பாற்றிவிட்டார்: விபத்து குறித்து குஷ்பு ட்வீட்

சென்னை

தான் பத்திரமாக இருப்பதாகவும், முருகக் கடவுள் காப்பாற்றிவிட்டார் என்றும் விபத்து குறித்து குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் தமிழகம் முழுக்க வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தாலும், தடையை மீறி நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும்போது, காவல்துறையினர் பாஜக தலைவர்களைக் கைது செய்து வருகிறார்கள்.

இன்று (நவம்பர் 18) கூடலூரில் வேல் யாத்திரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு காரில் பயணித்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் விபத்தில் சிக்கியது.

குஷ்பு கார் விபத்து என்ற செய்தி வெளியாகி, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தற்போது கார் விபத்து தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. காவல்துறையினர் விசாரிக்கின்றனர். முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.

ஊடகங்கள் தகவலை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். எனது கார் சரியான பாதையில்தான் பயணித்தது. கன்டெய்னர் லாரி வந்த திசை எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வாகனமே எங்களின் கார் மீது மோதியது. போலீஸார் இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்''.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

தனது காரின் புகைப்படங்களுடன் குஷ்பு ட்வீட் செய்தார். பலரும் அவரை நலம் விசாரித்து ட்வீட் செய்துள்ளனர். மேலும், தொலைபேசி வாயிலாகவும் அவரை நலம் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x