

காஷ்மீர் தீவிரவாதிகள் தென் மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளதால், தமிழக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் மாநிலங்களில் காஷ்மீர் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் தகவல் கொடுத்துள்ளனர். வியாபாரிகள் என்றபெயரில் அவர்கள் தென்மாநிலங்களுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தவும், முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கிலும் அவர்கள் வந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே காரணம் என தீவிரவாதிகள் கருதுவதால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21-ம்தேதி தமிழகம் வருகிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் வியாபாரிகள் பலரும் தமிழகத்தில் உள்ளனர்.
புதிதாக வியாபாரிகள் யாராவது காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்துள்ளனரா என்று அவர்களது உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது. காஷ்மீர், டெல்லியில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதில் அமித் ஷாவுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.