Last Updated : 17 Nov, 2020 05:21 PM

 

Published : 17 Nov 2020 05:21 PM
Last Updated : 17 Nov 2020 05:21 PM

திமுகவிடம் தொகுதிகள் குறித்துப் பேசுவோம்; எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்த மாட்டோம்: கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம்.

புதுக்கோட்டை

திமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் கள நிலவரம், வாக்கு வங்கிகளின் அடிப்படையிலான புள்ளிவிவரங்களை வைத்துப் பேசுவோமே தவிர எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்த மாட்டோம் என, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல் தலைமையில் இன்று (நவ.17) ஆலங்குடி மற்றும் சிவகங்கை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"தமிழகத்தில் அரசியல் சூழல் குறித்து 'ஐபேக்' எனும் நிறுவனத்தை வைத்து திமுக சர்வே செய்ததைப் போன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு நிறுவனத்தை வைத்து 234 தொகுதிகளிலும் சர்வே செய்துள்ளது.

அதன்படி, தொகுதிப் பங்கீடு குறித்து திமுக அழைக்கும்போது எங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் கள நிலவரம், வாக்கு வங்கி, வேட்பாளர்களாகப் பரிந்துரை செய்யப்படுவோரின் பலம் போன்ற விவரங்களோடு சென்று பேசுவோமே தவிர, பொத்தாம் பொதுவாக எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தமாட்டோம்.

ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் சூழல் வெவ்வேறாகவே இருக்கும். எனவே, பிஹார் தேர்தல் முடிவோடு தமிழகத் தேர்தலை ஒப்பிட்டுப் பேசுவது தவறு.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 2019-ல் நடைபெற்ற தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது 38 இடங்களில் வெற்றி பெற்றன. இது, கூட்டணிக் கட்சிகளால் சாதித்தவையாகும்.

எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாகத் தேர்தலைச் சந்திக்கும்போது கிடைப்பதைவிட, கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்கும்போது கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அனைத்து நிலையிலான அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவிக்காமல், அந்தந்த மாநிலத்தின் தலைமைக்கும், மாவட்டங்களின் தலைமைக்கும் வழங்க வேண்டும் என்பது எனது கருத்து.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெளி மாநிலத்தவரைத் துணைவேந்தராக நியமித்ததையே ஏற்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான தேசியத் தலைவர் சோனியா காந்திதான்.

இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டுமே குடும்ப அரசியல் இருப்பதாக கேள்வி எழுப்புவது தவறு.

மத்திய உள்துறை அமைச்சர் எந்த ஊருக்கு வேண்டுமானும் செல்லலாம். தமிழகத்துக்கு வருவதைப் பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுவதைப் போன்று யாரும் அஞ்சவும் தேவையில்லை".

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x