Published : 17 Nov 2020 12:38 PM
Last Updated : 17 Nov 2020 12:38 PM

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை; சுற்றறிக்கை கையேடு, அவசரகால தொலைபேசி கையேடுகளை வெளியிட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கையேடு மற்றும் அவசரகால தொலைபேசி கையேடுகளை பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் பயனளிக்கும் வகையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, புயல் எச்சரிக்கையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது மற்றும் இடி மற்றும் மின்னல் மேலாண்மைக்கான செயல்திட்டம் - 2020 ஆகியவற்றின் தொகுப்பு கையேடு மற்றும் அவரச கால தொலைபேசி கையேடு ஆகியவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (நவ. 17) சென்னை எழிலகத்தில் வெளியிட்டார்.

பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழ்நாட்டுக்கு, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வட கிழக்குப் பருவமழைக் காலத்தில், குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு மழை அளவு கிடைக்கப் பெறுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 28.10.2020 அன்று தொடங்கியது. 28.10.2020 முதல் 16.11.2020 வரையிலான இயல்பான மழையளவு 287.9 மி.மீ. ஆனால், 180.7 மி.மீ. அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 37 சதவீதம் குறைவாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களின் இன்றைய நீரளவு.

நீர்த்தேக்கத்தின் பெயர் - முழு நீர்மட்டம் (அடி) - இன்றைய நீர்த்தேக்க ஆழம் (அடி)

1. மேட்டூர் 120.00 - 94.83

2. பவானிசாகர் 105.00 - 95.47

3. பூண்டி 35.00 - 28.65

4. சோழவரம் 18.86 - 3.76

5. செங்குன்றம் (புழல் ஏரி) 21.20 - 16.98

6. செம்பரம்பாக்கம் 24.00 - 21.13

7. வீராணம் 15.60 - 13.70

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கடந்த கால நிகழ்வுகள் / தரவுகள் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4,133 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

மிகவும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் - 321

அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் - 797

மிதமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் - 1,096

குறைவாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் - 1,919

முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கரோனா நோய் தொற்று காரணமாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4,680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

பாதிப்புக்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்த ஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43 ஆயிரத்து 409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 232 மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கென 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

இது மட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குபவர்களையும் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறிந்து தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 ஜேசிபி இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்ப்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஊர்க்காவல் படையினைச் சார்ந்த 691 நபர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த, 11.09.2020 வருவாய் நிருவாக ஆணையர் காணொலி காட்சி மூலம் வட கிழக்குப் பருவமழை மற்றும் புயல் / சூறாவளி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.

36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் அறிவுரைபடி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து 18.09.2020 அன்று தலைமைச்செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும், 12.10.2020 அன்று தமிழக முதல்வர் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் மற்றும் துறை தலைவர்களுடன் விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x