Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

சென்னை - திருப்பதி இடையே நவ. 19-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு, வரும் 19-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வழக்கமாக இயக்கப்படும் பயணிகளின் ரயில் சேவை இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, மும்பை, புதுடெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் 19-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து, தினமும் காலை 6.25மணிக்கு புறப்படும் ரயில்(06057) காலை 9.40 மணிக்கு திருப்பதிக்கு செல்லும். இதேபோல், திருப்பதியில் இருந்து தினமும் காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில் (06008) மதியம் 1.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வரும்.

இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரக்குப்பம், புட்லூர், ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x