Last Updated : 16 Nov, 2020 07:10 PM

 

Published : 16 Nov 2020 07:10 PM
Last Updated : 16 Nov 2020 07:10 PM

தூத்துக்குடியில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி- சாலைகள், தெருக்கள் வெள்ளக்காடானதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள், தெருக்கள் வெள்ளக்காடானது. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

நகரின் அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழந்து நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. காலை நேரத்தில் சற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் காலை 9 மணிக்கு வலுத்துக் கொண்டது.

காலை 9 மணிக்கு தொடங்கிய கனமழை பகல் 1 மணி வரை சுமார் 4 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதற்குப் பிறகும் தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. விட்டுவிட்டு பலத்த மழையும் பெய்தது.

வீடுகளுக்குள் புகுந்தது:
இந்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமே வெள்ளக்காடானது. சாலைகள், தெருக்கள் அனைத்திலும் மழை வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள சுமார் 20 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் கால்டுவெல் காலனி 1-வது தெரு, மரக்குடி தெரு, லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் போலீஸார் அதனை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளம் சூழந்தது:

இதேபோல் அண்ணாநகர், தபால் தந்தி காலனி, லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, டயன்ஸ் டவுன், ராஜபாண்டிநகர், டூவிபுரம், சிதம்பரநகர், பூபால்ராயர்புரம் உள்ளிட்ட நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் குடியிருப்புகளை சூழந்து முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும், அனைத்து முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பல பகுதிகளில் மின்சாரமும் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் சாலை மழைநீரில் மூழ்கியது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது.

இதேபோல் நேற்று பகலில் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டியது. இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை அளவு:

மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 55, காயல்பட்டினம் 25, குலசேகரன்பட்டினம் 5, விளாத்திகுளம் 2, வைப்பார் 5, சூரன்குடி 8, கோவில்பட்டி 4, ஓட்டப்பிடாரம் 6, மணியாச்சி 24, வேடநத்தம் 5, கீழஅரசடி 5.2, எட்டயபுரம் 2, சாத்தான்குளம் 15.4, ஸ்ரீவைகுண்டம் 10, தூத்துக்குடி 31 மி.மீ. மழை பெய்துள்ளது. காலை 8 மணிக்கு பிறகு தான் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடதக்கது.

தூத்துக்குடியில் 8 மணி நேரத்தில் 122 மி.மீ. மழை பதிவு:

தூத்துக்குடியில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 8 மணி நேரத்தில் 122 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 8 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 14, காயல்பட்டினம் 52.2, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 21, காடல்குடி 13, வைப்பார் 47, சூரன்குடி 20, கோவில்பட்டி 73, கழுகுமலை 28, கயத்தாறு 47, கடம்பூர் 70, ஓட்டப்பிடாரம் 36, மணியாச்சி 34, வேடநத்தம் 15, கீழஅரசடி 4.5, எட்டயபுரம் 55, சாத்தான்குளம் 64, ஸ்ரீவைகுண்டம் 49.5, தூத்துக்குடி 122.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 800.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 42.13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x