Last Updated : 16 Nov, 2020 06:18 PM

 

Published : 16 Nov 2020 06:18 PM
Last Updated : 16 Nov 2020 06:18 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் 14,44,432 வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் இன்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 14,44,432 வாக்காளர்கள் உள்ளனர்.

1.1.2021 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணி நடைபெறவுள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் நகலை சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (அதிமுக), பெ.கீதாஜீவன் (திமுக), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (திமுக) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரகு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் மாவட்ட அரங்காவலர் குழு தலைவர் பி.மோகன், காங்கிரஸ் மாவட்டத் மாநகர் தலைவர் சி.எஸ்.முரளிதரன், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்து உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணி 16.11.2020 முதல் 20.01.2021 வரை நடைபெறுகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவுப் பட்டியலில் 7,07,905 ஆண்கள், 7,36,397 பெண்கள், 130 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,44,432 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது புதிதாக 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,603 ஆக உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து 1.1.2021-ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு 2021 ஜனவரி 20-ம் தேதி வரை மனு அளிக்கலாம். இதற்காக 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியல் 20.01.2021-ல் வெளியிடப்படும்.

இந்த பணிக்காக மாவட்டத்தில 1,603 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 871 நியமன அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களது பணிகளை கண்காணிக்க 159 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக பெயர் சேர்த்தல் (படிவம் 6), பெயர் நீக்கம் (படிவம் 7), திருத்தங்களை மேற்கொள்ளுதல் (படிவம் 8), தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8ஏ), வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க (படிவம் 6) போன்றவைகளுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த படிவங்களை www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பம் செய்யலாம் என்றார் ஆட்சியர்.


சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் விபரம்:

விளாத்திகுளம்: ஆண்கள்- 1,03,592, பெண்கள்- 1,07,261, மூன்றாம் பாலினத்தவர்கள்- 3, மொத்தம்- 2,10,856.
தூத்துக்குடி: ஆண்கள்- 1,35,700, பெண்கள்- 1,41,335, மூன்றாம் பாலினத்தவர்கள்- 52, மொத்தம்- 2,77,087.
திருச்செந்தூர்: ஆண்கள்- 1,15,696, பெண்கள்- 1,22,437, மூன்றாம் பாலினத்தவர்கள்- 17, மொத்தம்- 2,38,150.
ஸ்ரீவைகுண்டம்: ஆண்கள்- 1,07,461, பெண்கள்- 1,10,174, மூன்றாம் பாலினத்தவர்கள்- 5, மொத்தம்- 2,17,640.
ஓட்டப்பிடாரம்: ஆண்கள்- 1,18,969, பெண்கள்- 1,23,532, மூன்றாம் பாலினத்தவர்கள்- 25, மொத்தம்- 2,42,526.
கோவில்பட்டி: ஆண்கள்- 1,26,437, பெண்கள்- 1,31,658, மூன்றாம் பாலினத்தவர்கள்-28, மொத்தம்- 2,58,173.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x