Last Updated : 16 Nov, 2020 06:08 PM

 

Published : 16 Nov 2020 06:08 PM
Last Updated : 16 Nov 2020 06:08 PM

கனமழையால் வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்

வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் சுமார் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஏரியே பாதுகாத்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்குத் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஸ்ரீமுஷ்ணம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதுபோலக் கீழணைக்கு மேல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கீழணைக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை நீர், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 150 கன அடி என்ற அளவில் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 45.5 அடி ஆக உள்ளது.

சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 70 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்குப் பாசன மதகுகள் மூலம் விநாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால் ஓரிரு நாட்களில் ஏரி நிரம்பி, உபரி நீர் வடிகால் மதகுகளில் திறந்து விடப்படும் நிலை ஏற்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x