

குமரிக் கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“குமரிக் கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.
கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 (17.11.2020) மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 72 (18.11.2020) மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் ) 18 செ.மீ., காஞ்சிபுரம் 16 செ.மீ., மரக்காணம் (விழுப்புரம்) 12 செ.மீ., வானமாதேவி (கடலூர்) 11 செ.மீ., கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) , மகாபலிபுரம் தலா 10 செ.மீ., திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) , கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 9 செ.மீ., கடலூர், ஆரணி (திருவண்ணாமலை) , திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுராந்தகம் தலா 8 செ.மீ., செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் ), பரங்கிப்பேட்டை ( கடலூர் ), வந்தவாசி (திருவண்ணாமலை) , அரவக்குறிச்சி (கரூர் ) தலா 7 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.