Published : 16 Nov 2020 03:59 PM
Last Updated : 16 Nov 2020 03:59 PM

பழநி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திரையரங்கு உரிமையாளர் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு: போலீஸார் நவடிக்கை

திண்டுக்கல்

பழநியில் இடத் தகராறு காரணமாக இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய திரையரங்கு உரிமையாளர் நடராஜன் மீது, 294 (பி),307, 27(1) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டதில் பழனிச்சாமியின் உடலில் பாய்ந்த குண்டை பழநி அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் அகற்றினர். தற்போது பழனிச்சாமி உடல்நிலை நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயியான இளங்கோவனுக்கு சொந்தமாக பழநி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி இடம் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகே பிரபல தொழிலதிபரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இளங்கோவன் இடத்தில் தனக்குச் சொந்தமான நிலமும் இருப்பதாக தொழிலதிபர் நடராஜன் தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைக்கச் சென்றபோது இடத்திற்கும் நுழையக்கூடாது என்று தொழிலதிபர் நடராஜன் தெரிவித்ததால், இளங்கோவனின் உறவினர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடராஜனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆவேசமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதாகத் தெரிகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளங்கோவன் தப்பியோடிய நிலையில் சுப்பிரமணி வயிற்றிலும், பழனிச்சாமி இடுப்பிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தொழிலதிபர் நடராஜன் தப்பியோடினார். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இடப்பிரச்சனை காரணமாக நடராஜன் என்பவர்

சுப்பிரமணி, பழனிச்சாமி ஆகியோரை தான் வைத்திருந்த ரிவால்வார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளார். முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.

வயிற்றில் குண்டு காயம் பட்ட சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் நான்குமுறை நடராஜன் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழநி நகர் போலீஸார், நடராஜன் மீது, 294(பி),307, 27(1) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டதில் பழனிச்சாமியின் உடலில் பாய்ந்த குண்டை பழநி அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் அகற்றினர். தற்போது பழனிச்சாமி உடல்நிலை நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தை தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x