

தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சமீரன் நேற்று வெளியிட்டார். அதனை, மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் சமீரன் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 40 ஆயிரத்து 488, பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 62 ஆயிரத்து 764, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 55 என மொத்த வாக்காளர் எண்ணிக்கை 13 லட்சத்து 3 ஆயிரத்து 308 ஆக இருந்தது.
அதன் பின்னர் தொடர் திருத்ம் மேற்கொள்ளப்பட்டதில் 3 ஆயிரத்து 438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 15 ஆயிரத்து 65 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 34 ஆயிரத்து 450, பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 57 ஆயிரத்து 191, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 40 என மொத்த வாக்காளர் எண்ணிக்கை 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 பேர் உள்ளனர்.
தேர்தல் ஆணைய உத்தரவின்படி நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 1.1.2021_ஐ தகுதி நாளாகக் கொண்டு அன்றைய தினம் 18 வயது பூர்த்தி அடைபவர்களும், விடுபட்ட வாக்காளர்களும் தங்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6_ஐ பயன்படுத்தலாம்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், www.nvsp.in என்ற தேர்தல் ஆணைய இளையதளத்திலும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்:
தொகுதி ஆண் பெண் மூன்றாம்பாலினம் மொத்தம்
சங்கரன்கோவில் 1,19,289 1,25,887 5 2,45,181
வாசுதேவநல்லூர் 1,14,800 1,17,878 12 2,32,890
கடையநல்லூர் 1,38,885 1,40,204 2 2,79,091
தென்காசி 1,38,843 1,43,373 15 2,82,231
ஆலங்குளம் 1,22,633 1,29,849 6 2.52.488