Published : 16 Nov 2020 12:09 PM
Last Updated : 16 Nov 2020 12:09 PM

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழக மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி

சென்னை

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார். மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று வெளியிட்டார்.

2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் விதமாக தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 3.01 கோடி ஆகும். பெண் வாக்காளர்கள் 3.09 கோடி ஆகும். மாற்றுப் பாலின வாக்காளர்கள் 6385 ஆகும். இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் பெரிய சட்டப்பேரவை தொகுதி சோழிங்க நல்லூர் ஆகும் இங்கு 6.53 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதி கீழ்வேலூர் ஆகும் இங்கு 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அதே வேளையில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். சென்னையில் மாநகராட்சி ஆணையர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவதால அவர் வெளியிடுவார்.

பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து மாற்றங்களையும் க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு திருத்தம் மேற்கொள்ள இன்று (நவ.16) முதல் டிச. 15-ந்தேதி வரை 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் அளிக்கலாம்.

வருகிற 21, 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இவ்வாறு பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ந்தேதியன்று இறுதி செய்யப்பட்டு ஜனவரி 15-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x