Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

இன்று தேசிய பத்திரிகை தினம்; மக்களின் அரணாக திகழும் ஊடகங்களை போற்றுவோம்: ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம்கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவு: ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் சமூக அக்கறையோடு உலக நிகழ்வுகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் வழங்க இரவு, பகல் பாராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை மற்றும் ஊடகவியல் துறை நண்பர்களுக்கு எனது உளமார்ந்த தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி, மத நல்லிணக்கம், ஏழை நடுத்தர வர்க்க மக்கள் நலன் ஆகியவை எதேச்சதிகார மனம் கொண்டவர்களால் எள்ளி நகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காகப் போராட, வாதாட, எழுத,எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும் என்று தேசிய பத்திரிகை நாளில் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்களது வெற்றியில் உலக வெற்றி உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்தான்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: தேசிய பத்திரிகையாளர் தினத்தில் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஊடகத் துறையினரின் நலன்களை எந்நாளும் பாதுகாத்திடுவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நேரம் காலம் பாராமல், இயற்கை சீற்றங்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கு இடையில் தன்னலம்கருதாமல் செய்திகளை சேகரித்துமக்களிடையே கொண்டு செல்லும் பணி என்பது மகத்தான, போற்றுதலுக்குரிய பணியாகும். ஊடக தர்மத்தைக் கடைபிடித்து, பணியாற்றி, நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் உறுதுணையாக, அரணாக திகழும் பத்திரிகையாளர்களுக்கு தமாகா என்றும் துணை நிற்கும். இந்நாளில் மென்மேலும் தங்கள் பணி சிறக்க அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x