Published : 03 Oct 2015 08:18 AM
Last Updated : 03 Oct 2015 08:18 AM
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைப்பிடித்தனர்.
நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த சத்யனின்(34) விசைப்படகில், அவரும், அவரது தம்பி வாஞ்சி நாதன்(25), முருகன்(24), ராஜேஷ்(22), அண்ணாமலை(25), மோகன்காந்தி(22), சுப்பிரமணி யன்(25) ஆகியோரும் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லை யில் மீன் பிடித்துவிட்டு, பின்னர் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களை நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினர் வழிமறித்து, சரமாரியாக தாக்கினர். மேலும், மீனவர்களைக் கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர் கள், பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மீண்டும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது நாகை மீனவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நம்பியார் நகர் மீனவர்கள் நேற்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT