திருச்சி மாநகராட்சியில் தீபாவளி நாளில் கூடுதலாக குவிந்த 25 டன் குப்பை

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் குவிந்துள்ள குப்பை. படம்: ஜி.ஞானவேல்முருகன்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் குவிந்துள்ள குப்பை. படம்: ஜி.ஞானவேல்முருகன்.
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் தீபாவளி நாளில் வழக்கத்தைவிட கூடுதலாக 25 டன் குப்பை சேர்ந்தது.

திருச்சி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்டங்கள் உள்ளன. இந்த 4 கோட்டங்களிலும் சுமார் 2.35 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன.

திருச்சி மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு 400 டன் முதல் 450 டன் வரை குப்பைகள் சேரும். மக்கும் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்படும் நிலையில், மக்காத குப்பைகள் அரியமங்கலம் குப்பைக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என இன்று மாநகரில் வழக்கத்தைவிட சுமார் 25 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.

இது குறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் கூறும்போது, "தீபாவளி பண்டிகை நாளில் கோட்டம்தோறும் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை வரப் பெறும். அதன்படி, கோ-அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய 3 கோட்டங்களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை குவிந்துள்ளது.

ஆனால், பெரிய கடை வீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகள் கொண்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இருந்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 டன் குப்பை வரப் பெற்றது.

தீபாவளி மறுநாளான இன்று (நவ. 15) மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பைகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in