Published : 15 Nov 2020 01:26 PM
Last Updated : 15 Nov 2020 01:26 PM

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்: திமுக படுதோல்வியை சந்திக்கும்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரை

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும், திமுக படுதோல்வியை சந்திக்கும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா பேரவை சார்பில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ. 15) நடைபெற்றது. இதில், அதிமுக அம்மா பேரவை செயலாளரும், மதுரை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:

"ஜெயலலிதாவின் வழியில் மக்கள் போற்றும் நல்லரசாக, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை முதல்வர் செய்து வருகிறார். அவருக்குத் துணையாக துணை முதல்வர் திகழ்கிறார்.

இந்த இயக்கம் தோன்றி 49 ஆண்டுகள் ஆகின்றன. இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து கொண்டு இருகின்ற இயக்கம் என்றால் அது அதிமுக மட்டும் தான். இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும்
இதுபோன்ற சிறப்பு இல்லை.

எம்ஜிஆரின் சத்துணவு திட்டம், ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம் அதேபோல் தற்போது முதல்வரின் குடிமராமத்துத் திட்டம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், திமுக ஆட்சியில் ஏதாவது சாதனைகளை ஸ்டாலின் சொல்ல முடியுமா? வேதனையை மட்டும் சொல்லலாம். கட்டப்பஞ்சாயத்து, அராஜகம், ஊழல், நில அபகரிப்பு, மின்வெட்டு, கச்சத்தீவு தாரை வார்ப்பு, முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தமிழகத்திற்கு அடுத்தடுத்து துரோகம்.

நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு எல்லாம் திமுக மறைமுக ஆதரவு அளித்து இது போன்று மக்களுக்குத் தந்த வேதனை ஆட்சியை தான் பட்டியலில்தான் போட முடியும்.

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி கொடுத்து அதன்மூலம் கேபிள் இணைப்புக்காக ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி சம்பாதித்தார்கள். அதேபோல், இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று கூறி அப்பாவி மக்களிடத்தில் நிலங்களை பறித்தார்கள். அதை எல்லாம் மீட்டுத் தந்தவர் ஜெயலலிதா என்பதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இன்றைக்கு உலகமே அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முதன்மையாக திகழ்கிறது என்று பிரதமரிடம் பாராட்டு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் முதல்வர்.

அதுமட்டுமல்லாது, இந்த நான்காண்டுகளில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகம் முதலிடம், பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தியில் தமிழகம் முதலிடம், கல்வித்துறையில் தமிழகம் முதலிடம், மருத்துவத் துறையில் முதலிடம், வருவாய் துறையில் முதலிடம், உள்ளாட்சித் துறையில் முதலிடம், இப்படி அனைத்துத் துறைகளிலும் தமிழகத்ததை முதலிடத்தில் தனது அயராத உழைப்பால் எடுத்துச் சென்ற தமிழக முதல்வருக்கு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பரிசாக தமிழக மக்கள் அமோக வெற்றி பெற வைத்து முதலிடத்தில் வைப்பார்கள்.

கருணாநிதி மகன் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் ஸ்டாலின் கோயபல்ஸ் பொய் பிரச்சாரத்தின் மறு உருவமாக திகழ்கிறார். உண்மை என்றும் தோற்காது, தர்மம் என்றும் தோற்காது. அதேபோல், பொய் என்றும் வெற்றி பெறாது. ஆகவே, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு முடிவுகட்டும் தேடலாக மக்கள் பாடம் புகட்டுவார்கள், திமுக படுதோல்வி அடையும். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார்".

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x