Published : 13 Nov 2020 06:59 PM
Last Updated : 13 Nov 2020 06:59 PM

நவ.16-க்குப் பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பேருந்து போக்குவரத்துச் சேவை; முதல்வர் பழனிசாமி உத்தரவு

நவ.16-ம் தேதிக்குப் பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்து இயக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (நவ. 13) வெளியிட்ட அறிவிப்பு:

"கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் பேருந்து போக்குவரத்துச் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 11.11.2020 முதல் 16.11.2020 வரை கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முதல்வர், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தினை தடையின்றி தொடர்ந்து இயக்க தமிழ்நாடு முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துச் சேவையை தொடர பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இக்கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்றுவர ஏதுவாகவும், நவம்பர் 16ஆம் (16.11.2020) தேதிக்குப் பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்து இயக்குமாறு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுப் பேருந்து சேவையைப் பயன்படுத்தும்போது, அரசு வெளியிட்டுள்ள நிலையான கரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x