Published : 13 Nov 2020 03:54 PM
Last Updated : 13 Nov 2020 03:54 PM

விசாரணைக் குழு அமைப்பு; சூரப்பா பதவி விலக வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை

விசாரணை நடத்த வாய்ப்பாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, உடனடியாகப் பதவி விலக வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தி.க.தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்களும், அதிகாரமீறல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்ட நிலையில், தமிழக அரசின் உயர் கல்வித் துறை அவர் மீது ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கலையரசன் குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை தருவார் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, உடனடியாகப் பதவி விலகினால்தான், பாரபட்சமின்றி விசாரணை நடத்த வாய்ப்பாக இருக்கும்.

குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படும் துணைவேந்தர் அப்பதவியில் நீடித்தால், ஆவணங்கள்கூட ‘மாயமாகி’ விடக்கூடும். ஆகையால், பதவி விலகலோ அல்லது தற்காலிக விலக்கலோ ஏற்படவேண்டும்”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x