Published : 13 Nov 2020 03:12 PM
Last Updated : 13 Nov 2020 03:12 PM

அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த மூன்று தினங்களுக்குத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“குமரிக் கடல் பகுதியில் நிலவும் கீழடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்குத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

அடுத்த 24 (13.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 (14.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 72 (15.11.2020) மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும், நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

காரியகோவில் அணை (சேலம்) 9 செ.மீ., நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, மகாபலிபுரம், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 6 செ.மீ., எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர் ) தலா 5 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி ), தம்மம்பட்டி (சேலம்), செங்கல்பட்டு, சீர்காழி (நாகப்பட்டினம்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 4 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x