Published : 13 Nov 2020 02:31 PM
Last Updated : 13 Nov 2020 02:31 PM

துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது.

தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிலையில் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு அரசாணை (GO(Rt) no 138) வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பில் இதற்கான ஆணை கடந்த நவ.11 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணையில் மேற்குறிப்பிட்ட விவரங்கள், புகார்கள், புகார் அளித்தவர்கள் குறித்து விரிவாகப் பதிவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட புகார்கள் குறித்து ஒரு நபர் விசாரணைக் குழு விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x