Published : 13 Nov 2020 11:13 AM
Last Updated : 13 Nov 2020 11:13 AM

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சென்னை

தமிழ்நாட்டில் 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நிதித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (நவ. 12) சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:

"தமிழகத்தின் நீர் மேலாண்மைத் திட்டங்களைப் பாராட்டும் வகையில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவிலேயே நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற முதல் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

கரூர், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் 8.24 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,347.05 கோடி மதிப்பில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஜல் ஜீவன் மஷன் திட்டத்தின் கீழ் அரசின் நிர்வாக அனுமதி பெற்று செயல்படுத்தப்படவுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி , திருப்பத்தூர் மற்றும் நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் உள்ள 759 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க பராமரிப்பில் இருக்கும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தொழிற்சாலை தேவை பங்கீட்டிலிருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.182.09 கோடியாகும். இத்திட்டத்தினை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்த மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் பரிந்துரை பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அரசின் நிர்வாக ஒப்புதல் பெற்று திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் பயனடைவர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 9 குடியிருப்புகளும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளைச் சேர்ந்த 29 குடியிருப்புகளும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளைச் சேர்ந்த 29 குடியிருப்புகளும், திருவிடைமருதூர் பேரூராட்சியில் உள்ள 1 குடியிருப்பு மற்றும் வேப்பத்தூரில் உள்ள 1 குடியிருப்பு என மொத்தம் 67 குடியிருப்புகள் என ஊரக வளர்ச்சித் துறை குடியிருப்புக் கணக்கின்படி, கண்டறியப்பட்டு ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம், கொள்ளிடம் ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு திட்ட மதிப்பீடு ரூ.117.09 கோடிக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 0.77 லட்சம் மக்கள் பயனடைவர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 31 ஊரகக் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 18 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட களியங்குளம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.50.50 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் 0.43 லட்சம் மக்கள் பயனடைவர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள 101 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், 378 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், ப்ளூரைட் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் வெள்ளகோவில் காங்கேயம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 4 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு ரூ. 440.63 கோடிக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 1 லட்சத்து 58 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள 8 ஊராட்சிகளுக்குப்பட்ட 197 ஊரகக் குடியிருப்புகளுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தில், தொலைவில் உள்ள 2 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் சாத்தியக்கூறு இல்லாததால், கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களிலுள்ள 6 ஊராட்சிகளில் மொத்தம் உள்ள 133 குடியிருப்புகளில், ஆற்றுக்குடிநீர் விநியோகம் இல்லாத 40 குடியிருப்புகள் மற்றும் ஏற்கெனவே கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் 56 குடியிருப்புகளையும் சேர்த்து மொத்தம் 96 ஊரகக் குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.56.94 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 48 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் அமைந்துள்ள 442 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள அரச்சலூர் அவல்பூந்துறை கூட்டுக் குடிநீர் திட்டம், மொடக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டம் (பழையது), மொடக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டம் (புதியது), முத்தம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சுப்பராயவலசு கூட்டுக் குடிநீர் திட்ட.ம் ஆகிய 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.412.12 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஓன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில், 144 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள அரச்சலூர் அவல்பூந்துறை கூட்டுக் குடிநீர் திட்டம், தேவம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம், எழுநூத்திமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம், புரவிபாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் வெள்ளக்கோயில் காங்கேயம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 38 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்".

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x