Last Updated : 12 Nov, 2020 06:59 PM

 

Published : 12 Nov 2020 06:59 PM
Last Updated : 12 Nov 2020 06:59 PM

கடம்பூர் - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கடம்பூர்- கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்று. தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

கடம்பூர் - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை வேலைகள் முடிவடைந்து கடந்த மார்ச் மாதம் தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தியிருந்தார்.

அந்த புதிய ரயில் பாதையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க அப்போது அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த ரயில் பாதையில் ரயிலல்களின் வேகத்தை 100 கிலோ மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் கடம்பூர் - கங்கைகொண்டான் பிரிவு இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தார்.

பின்னர் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அடுத்த ஆண்டு டிசம்பரில் முடியும்:

இதை தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் மதுரை கோட்ட மேலாளர் லெனின் கூறியதாவது:

மதுரையிலிருந்து திருநெல்வேலி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும். கடம்பூர்- கங்கைகொண்டான் இடையே ரயிலின் வேகத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு நடைபெற்றுள்ளது. அடுத்த 10 நாட்களில் அவ்வழியாக செல்லும் ரயில்களின் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும். திருநெல்வேலி திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

இதனிடையே தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து செங்கோட்டை, கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் வண்டி எண் 06181 சென்னை எழும்பூர் - செங்கோட்டை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில், வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில், 02661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் ஆகியவற்றில் முறையே ஓர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாரம் இருமுறை சிறப்பு ரயிலில் 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் வண்டி எண் 02633/02634 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02693/02694 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவற்றில் முறையே ஓர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x