Published : 12 Nov 2020 03:39 PM
Last Updated : 12 Nov 2020 03:39 PM

தீபாவளி எதிரொலி: ஓசூர் - பெங்களூரு இடையே 6 நாட்களுக்கு இருமாநிலப் பேருந்துகள் இயக்கம் - பயணிகள் வரவேற்பு

8 மாதங்களுக்கு பிறகு பெங்களூரு செல்ல ஓசூர் பேருந்து நிலையத்தில் தயாராக நின்றிருந்த தமிழக அரசு மற்றும் கர்நாடகா அரசுப் பேருந்துகள் | படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

தமிழ்நாடு - கர்நாடகா இடையே தீபாவளியை முன்னிட்டு 16-ம் தேதி வரை 6 நாட்களுக்கு இ- பாஸை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து 11-ம் தேதி இரவு 8.30 மணி முதல் ஓசூர் - பெங்களூரு இடையே இருமாநில அரசுப் பேருந்துகள் ஓடத்தொடங்கி உள்ளன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய இரு மாநில அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓசூர் பேருந்து நிலையம் மூடப்பட்டது. அதன் பிறகு முதல்கட்டமாக ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் மட்டும் மாவட்ட அளவில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்பு அதில் மாற்றம் ஏற்பட்டு சில நாட்கள் மாவட்டங்களுக்குள் மட்டும் அரசுப் பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் கடந்த ஜுலை 1-ம் தேதியன்று இரண்டாவது முறையாக அரசுப் பேருந்துகளின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஓசூர் பேருந்து நிலையம் மூடப்பட்டது. இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில் மீண்டும் கரோனா ஊரடங்கில் மேலும் தளர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என்ற அரசு உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் தமிழகம் - கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே அரசுப் பேருந்துகளின் இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் ஓசூர் வழியாக பெங்களூரு சாட்லைட் பேருந்து நிலையம் வரை சென்று கொண்டிருந்த அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள், தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து சுமார் 1 கி.மீ தூரம் வரை நடந்து சென்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் அம்மாநில அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

அதேபோல கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இறக்கி விடப்பட்டு, அங்கிருந்து சுமார் 1 கி.மீ. நடந்து வந்து ஜுஜுவாடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து ஓசூர் பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணித்து வருகின்றனர். இதில் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் வீட்டுச்சாமான்கள் உள்ளிட்ட மூட்டைகளுடன் வரும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் நீண்ட தூரம் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவ.11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகம் - கர்நாடகா இடையே இ-பாஸ் பதிவு நீக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஓசூர் - பெங்களூரு இடையே நேற்று இரவு 8.30 மணி முதல் இரு மாநில அரசுப் பேருந்துகளும் ஓடத்தொடங்கி உள்ளன. கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு இரு மாநிலங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் பயணிகள் வரவேற்று தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓசூர் பேருந்து நிலைய உதவி மேலாளர் கூறும்போது, ''ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் மண்டலப் பேருந்துகள் - 168, தருமபுரி மண்டலப் பேருந்துகள் - 140, விழுப்புரம் மண்டலப் பேருந்துகள் - 110 என மொத்தம் 418 விரைவுப் பேருந்துகள் ஓசூர் வழியாக பெங்களூரு நகருக்கு இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் நேற்று இரவு 8.30 மணி முதல் ஓடத்தொடங்கி உள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வரை 6 நாட்கள் மட்டுமே ஓசூர் - பெங்களூரு வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x