சொந்த ஊரில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் பயணம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்; கரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்தது

தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வருகைக்காக சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள். படம்: ம.பிரபு
தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வருகைக்காக சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள். படம்: ம.பிரபு
Updated on
2 min read

கரோனா பரவல் அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றனர். மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை வரும் 14-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து 9,510 பேருந்துகள், மற்ற பகுதிகளில் 5,247 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நெரிசலை குறைக்க, சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகளை பிரித்து இயக்குவதற்கும், நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகள் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேநேரம், இந்த ஆண்டு கரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் செல்வது கணிசமாக குறைந்துள்ளது. தவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் மாலை வரை மழை பெய்ததாலும் கூட்டம் வெகுவாக குறைந்தது. இருப்பினும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் வரிசையாக இயக்கப்பட்டன. பல பயணிகளும் முகக் கவசம் அணிந்திருந்தனர். ஆனால், பெரும்பாலான பேருந்துகளின் இருக்கைகளில் இடைவெளி இல்லாமல் அமர்ந்ததையும் காண முடிந்தது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக சென்னையில் இருந்துபல லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். முதல் நாளான இன்று (நேற்று) வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகள் தவிர, 225 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்தோம். இருப்பினும், மாலை 4 மணிக்கு பிறகே கூட்டம் வரத் தொடங்கியது. இரவு 11 மணி வரை பயணிகள் கூட்டம் ஓரளவு இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். கரோனா அச்சம், பகலில் பெய்த மழையால் பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

கடந்த ஆண்டைவிட, 35 சதவீதம் கூட்டம் குறைவு. அடுத்தடுத்த நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய அடுத்தடுத்த நாட்களுக்கு சுமார் 85 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து 12-ம்தேதி (இன்று) 1,705 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3,705 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கரோனா காரணமாக வெளி மாநிலங்களுக்கு இதுவரை பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், 11-ம் தேதி (நேற்று) முதல் 16-ம்தேதி வரை தமிழகம் - கர்நாடகாஇடையே பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக, வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்பட்டன. பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே ரயில்நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படாததால், பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டைவிட சுமார் 40 சதவீதம் கூட்டம் குறைவு என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in