Published : 11 Nov 2020 08:57 PM
Last Updated : 11 Nov 2020 08:57 PM

திருவண்ணாமலை தீபத் திருவிழா எப்படி நடத்துவது?- நாளைக்குள் முடிவு: கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் பதில்

சென்னை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் மற்றும் தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நவம்பர் 29-ம் தேதி கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா மற்றும் அதைத்தொடர்ந்து தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழகத் துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வழக்கமான முறைப்படி நவம்பர் 17 -ம் தேதி கொடியேற்றம் நடத்தி 17 நாட்கள் நடைபெறும் முறைப்படி தீபத்திருவிழா, தேர்த்திருவிழா நடத்த வேண்டுமெனவும் இதுகுறித்து நவம்பர் 7-ம் தேதி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பக்தர்களை அனுமதிக்காமல் கோயில் நிகழ்வுகளை நடத்தலாம் என்றும், கோயில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் தேர் திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பூரி ஜெகன்நாதர் திருவிழா நடத்தியது போல அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்தால் பிற ஊர்களிலிருந்து வரும் பக்தர்களை கட்டுபடுத்தலாமே தவிர, திருவண்ணாமலையில் உள்ள உள்ளூர் மக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், மக்களை கட்டுப்படுத்துவதற்காக மனுதாரர் அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எல்லாவற்றையுமே காவல்துறை கட்டுப்படுத்த வேண்டுமென நினைக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.

அப்போது அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, கோயில் விழாக்கள் நடத்துவது குறித்து அக்டோபர் 30-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் கோயில் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், அதன்படி இந்த விழாவை எப்படி நடத்த வேண்டுமென கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலையார் கோயில் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, வழக்கமாக 17 நாட்கள் விழாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர், தேர் திருவிழாவில் 5 லட்சம் பேர், மகா தீபத்தன்று 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை கருத்தில் கொண்டு பூஜைகளை அனைத்தும் முறையாக நடத்தப்படும் என்றும், தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல் உற்சவரை வைத்து கோயிலுக்குள் மட்டுமே நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தீபத்திருவிழா எப்படி நடத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறை, தமிழக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் இன்று கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், அதில் நாளைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா குறித்து கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x