

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் தொடங்கியது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இதில் பால்துரை என்பவர் கரோனாவால் உயிரிழந்தார். ஸ்ரீதர் உட்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி வடிவேல் முன்பு இன்று தொடங்கியது. இதையடுத்து ஸ்ரீதர் உட்பட 9 பேரும் நீதின்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேருக்கும் 2027 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சிறையில் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. சிறையில் முதல் வசதி வழங்கவும், வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதியிடம் தெரிவித்தார்.
பின்னர் விசாரணையை டிச. 10-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.