Last Updated : 11 Nov, 2020 05:03 PM

 

Published : 11 Nov 2020 05:03 PM
Last Updated : 11 Nov 2020 05:03 PM

காளையார்கோவில் அருகே பல நாட்களாக மின் விநியோகம் இல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் மறியல்

தொடர் மின்தடையை கண்டித்து காளையார்கோவில் துணை மின்நிலையம் முன்பாக மதுரை-தொண்டி சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள்.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பல நாட்களாக மின் விநியோகம் இல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காளையார்கோவில் அருகே மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து மறவமங்கலம், ஏரிவயல், சூராணம், புல்லுக்கோட்டை, வலையம்பட்டி, குண்டாக்குட, சிலுக்கப்பட்டி, பெரியகண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.

மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் ஒரே டிரான்ஸ்பார்ம் மட்டுமே உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் அளிக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குறையழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெரியகண்ணனூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மின் உபயோக பொருட்களை பயன்படுத்த முடியவில்லை.

பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாமல் பயிர்கள் காய்ந்து வருகின்றன. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை.

இதுகுறித்து மறமங்கலம் துணை மின்நிலையத்தில் கிராமமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து காளையார்கோவில் துணை மின்நிலையம் முன்பாக மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கண்ணனூர் கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது பகுதியை மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து பிரித்து காளையார்கோவில் துணை மின்நிலையத்துடன் இணைக்க வேண்டுமென கோஷம் எழுப்பினர்.

மின்வாரிய அதிகாரிகள், போலீஸார் சமரசப்படுத்தியதை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x