மதுவிலக்கு போராட்ட பிரச்சாரப் பாடகர் கோவன் கைது

மதுவிலக்கு போராட்ட பிரச்சாரப் பாடகர் கோவன் கைது

Published on

மதுவிலக்கு போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலை இயற்றி பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் கோவன் என்கிற சிவதாஸ், சென்னையிலிருந்து சென்ற சிறப்பு போலீஸ் படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவர் மீது அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள அரவனூரில் அவரது வீட்டில் வைத்து சென்னை போலீஸ் படை கைது செய்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 'மூடு டாஸ்மாக்கை மூடு' எனும் பாடலை வெளியிட்டு, அதனை சிடி நகல்களில் வெளியிட்டனர். பிறகு இதே கருத்தை மையமாக வைத்து திருச்சி நகரமெங்கும் வீதிநாடகம் நடத்தி வந்தனர்.

கோவனின் 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் வாட்ஸ் அப், யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது சமூகத்தில் மோதல் உருவாக்குவது, அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in