Published : 11 Nov 2020 02:53 PM
Last Updated : 11 Nov 2020 02:53 PM

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் வழக்கு; 2 வாரங்களில் அறிவிப்பு: உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் பதில்

சிவகங்கை மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்டப் பஞ்சாயத்திற்கு 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களைக் கொண்டு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவர். ஆனால், போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, செந்தில் குமார் உட்பட 8 உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்ட விதிகளின்படி, மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டினார்.

தேர்தல் எப்போது நடத்தப்படும் என விளக்கமளிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், இரண்டு வாரங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x