குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களும் பயன்படுத்துவதால்; வழக்கறிஞர் ஸ்டிக்கர்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?- டிஜிபி, சட்டப்பல்கலை துணை வேந்தர் பதிலளிக்க உத்தரவு

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களும் பயன்படுத்துவதால்; வழக்கறிஞர் ஸ்டிக்கர்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?- டிஜிபி, சட்டப்பல்கலை துணை வேந்தர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தி வருவதால் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

பலர் தங்களது வாகனங்களில் வழக்கறிஞர்கருக்கான அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், ரவுடிகளும் தங்கள் வாகனங்களில் வழக்கறிஞர்கள் என ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பி வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களில் வருவோரை உண்மையான வழக்கறிஞர்கள் கேள்வி கேட்டால், சட்டக்கல்லூரியில் படித்து வருவதாக தெரிவிக்கின்றனர். பக்கத்து மாநிலங்களில் அதிகளவு சட்டக்கல்லூரிகள் உள்ளன.

ரவுடிகள் பலர் அந்தக் கல்லூரியில் பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருகின்றனர்.

எனவே, பார் கவுன்சில் அனுமதி வழங்கும் வழக்கறிஞர்களுக்கு மட்டும் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் வழங்கவும், வாகனங்களில் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்பி வருகின்றனர். இதைத் தடுக்க வழக்கறிஞர் ஸ்டிக்கர்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?

இது தொடர்பாக டிஜிபி, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 23-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in