Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு சந்தை, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த செப். 28-ம் தேதி முதல் திறக்கப்பட்டது. காய்கறி மொத்த வியாபாரிகள், பழ மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுபோல், சிறு மொத்த வியாபாரிகளுக்கும் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிஎம்டிஏ சார்பில் வியாபாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கோயம்பேடு சந்தையில் ஏ முதல் ஜி பிளாக் வரை, காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறு மொத்த வியாபாரிகளுக்கு வரும் 16-ம் தேதி, பழம் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறு மொத்தம் வியாபாரிகளுக்கு வரும் 23-ம் தேதி, எக்ஸ் முதல் என் பிளாக் வரையிலான சிறு மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு வரும் 30-ம் தேதி முதல், வியாபாரம் செய்ய அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகளில் கூறியிருப்பதாவது:
அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவத் துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
அங்காடிக்குள் 3 சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வது முற்றிலும் தடை செய்யப்படும். தனியார் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
அங்காடிக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனை கருவி, கைகழுவும் திரவம் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும். கடை வியாபாரிகள் தங்களது கடைகளுக்குள் வியாபாரம் செய்ய வேண்டும். வெளியே மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வது அனுமதிக்கப்படாது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாரந்தோறும் ஒரு நாள் அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த வழிகாட்டு நடைமுறையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT