Published : 10 Nov 2020 06:28 PM
Last Updated : 10 Nov 2020 06:28 PM

தமிழக மீனவர்கள் கைது; இலங்கைக் கடற்படையின் அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டதால் ஏற்பட்ட பதற்றம் தணியும் முன்பே, மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இன்று (நவ. 10) காலை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் காங்கேயன் துறைமுகத்தில் உள்ள முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, இன்று, நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 மீனவர்களை, பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கரோனா காரணமாக சில மாதங்களாகக் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக் கடற்படையின் அத்துமீறலும், அட்டூழியங்களும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டதால் ஏற்பட்ட பதற்றம் தணியும் முன்பே, மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x