

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கிராம மக்கள் எதிர்ப்பால் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மத்திய நிலத்தடிநீர் வாரியம் நிறுத்தியது.
மத்திய நிலத்தடிநீர் வாரியம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நிலத்தடிநீரின் இருப்பு, கடினத்தன்மை போன்றவை சோதனையிடப்பட்டு வருகிறது.
இதற்காக ஆங்காங்கே ராட்சத போர்வெல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆய்வு பணி முடிந்ததும் அந்த போர்வெல்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி காளையார்கோவிலில் மாந்தாளி கண்மாயில் ராட்சத போர்வெல் அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் குறையும் என கூறி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று போராட்டமும் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து ஆழ்த்துளை கிணறு அமைக்கும் பணியை மத்திய நிலத்தடிநீர் வாரிய அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். இதனால் போராட்டமும் கைவிடப்பட்டது.