Published : 10 Nov 2020 06:12 PM
Last Updated : 10 Nov 2020 06:12 PM

நெய்வேலி முந்திரி வியாபாரி மரணம்; காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதியக் கோரிய வழக்கு: தமிழக அரசு, சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதியக் கோரிய மனைவி பிரேமாவின் வழக்கில், தமிழக அரசும் சிபிசிஐடியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அக்டோபர் 28 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைதாகி விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நவம்பர் 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4 ஆம் தேதி மரணமடைந்ததாக அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

நெய்வேலி காவல்துறையினர் அவரை அடித்துச் சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாகவும், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் செல்வமுருகனின் மனைவி பிரேமா நவம்பர் 5 ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நெய்வேலி டிஎஸ்பி அலுவலக குற்றப்பிரிவில் உள்ள சுதாகர், அறிவழகன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரும் புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். செல்வமுருகன் உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று (நவ. 10) நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேமா தரப்பில் வழக்கறிஞர் பி.குமரேசன் ஆஜராகி, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது அவசியம் என்றும், காவல்துறையினர் மீது வழக்குப் பதிய வேண்டுமெனவும், மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதலின்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றதாகவும், அதை முழுமையாக வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த மரணம் போலீஸ் காவலில் நடைபெறவில்லை எனவும், அரசியல் நோக்கத்திற்காக கட்டுக்கதைகள் புனையப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடியை எதிர்மனுதாரராகச் சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதியக் கோரும் பிரேமாவின் மனு குறித்து, தமிழக அரசும் சிபிசிஐடியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x