Published : 10 Nov 2020 03:16 PM
Last Updated : 10 Nov 2020 03:16 PM

நாடு முழுவதும் அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை: 13 -ம் தேதி வரை நடக்கிறது

நாடு முழுவதும் அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை வரும் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. எதிர்காலத்துக்குச் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் தங்கப் பத்திர சேமிப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென இந்திய அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்துக் கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''இந்திய அரசு தங்கப் பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,177 ரூபாயாகும்.

தனி நபர் ஒரு நிதியாண்டிற்குக் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் சேர, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை. அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு, தங்கப் பத்திரத்தை அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று கணேஷ்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x