

வனவிலங்குகளிடமிருந்து மலைப்பயிர்களைக் காப்பாற்ற சோலார் மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலைப்பயிர்களை யானைகள் அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. விவசாயிகள் இதனால் பெரும் இழப்பிற்கு ஆளாகின்றனர்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, கவியக்காடு, காமனூர், படலங்காடு உள்ளிட்ட பல்வேறு மலைகிராமங்கள் மற்றும் மலையடிவாரத்தில் உள்ள கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராம விளைநிலங்களில் யானைகள் நடமாட்டம் இருந்துவருகிறது.
இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, எலுமிச்சை, சவ்சவ், மிளகு, உள்ளிட்ட பல்வேறு பயிர்களை ஆண்டுதோறும் யானைகள் சேதப்படுத்துவதும், விவசாயிகள் இழப்பிற்குள்ளாவது தொடர்கிறது.
இதற்கு தீர்வாக பயிர்களை யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றி விவசாயிகளின் இழப்பை தவிர்க்கயானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் விளைநிலங்களை பாதுகாக்கும் வைகையில் சோலார் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தாமல் சோலார் மின்வேலி அமைத்து பயிர்களையும் விவசாயிகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.