தமிழக மீனவர்களின் 122 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு; அரசு தலையிட்டு மீட்டுத் தரவேண்டும்: முத்தரசன்

தமிழக மீனவர்களின் 122 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு; அரசு தலையிட்டு மீட்டுத் தரவேண்டும்: முத்தரசன்
Updated on
1 min read

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 122 படகுகளை அழித்துவிட இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது, நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று உள்ளது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:.

“தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்திட்ட வாக்குறுதிகள் பலவும் தொடர்ந்து நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமைகளுக்கும், உயிர்க்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாகும்.

குறிப்பாக, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் துயர நிகழ்வாகும். தற்போது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 122 படகுகளை அழித்துவிட இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.

ரூ.30 லட்சம் மதிப்பிலான படகுகளை அழித்துவிட வேண்டும் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று உள்ளது. இந்திய அரசு இலங்கையுடன் உள்ள நல்லுறவை பயன்படுத்தி தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு மீனவர்களிடம் வழங்கிட உரிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக மீனவர்களின் உடமைகளை காக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in