Last Updated : 09 Nov, 2020 01:31 PM

 

Published : 09 Nov 2020 01:31 PM
Last Updated : 09 Nov 2020 01:31 PM

கல்வித்துறைக்கென மாவட்டத்திற்கு ஒரு சட்ட ஆலோசகரை ஏன் நியமனம் செய்யக் கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை

கல்வித்துறைக்கென மாவட்டத்திற்கு ஒரு சட்ட ஆலோசகரை ஏன் நியமனம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டம் குழித்துறை கல்வி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் கேட்டு மனு அனுப்பட்டது. அப்போது கல்வித் துறை அதிகாரிகள் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "கடந்த 2016-ம் ஆண்டு மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர்," இதற்குக் காரணமான குமரி மாவட்டத்தில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், 1069 நாட்கள் தாமதமாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறை படுத்தவில்லை. காரணம் கேட்டால், உத்தரவு நகல் கிடைக்கவில்லை என பதில் கூறப்படுகிறது. கல்வித் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டவுடன், தொடர்புடைய ஊழியர்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கல்வித் துறையில் தான் அதிக அளவு வழக்குகள் பதிவாகின்றன. உயர் நீதிமன்ற உத்தரவு நகல்கள், இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஒவ்வோரு மாவட்டத்திலும் கல்வி துறைக்கு என தனி சட்ட ஆலோசகரை ஏன் நியமனம் செய்யக் கூடாது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , காலதாமதத்திற்காக, குழித்துறை மாவட்ட கல்வி அதிகாரிக்கு 15 ஆயிரம் ரூபாயும், குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாயையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டு மனுவை அனுமதித்தனர்.

மேலும் உயர் நீதிமன்ற இணையதளத்தில் நீதிமன்ற உத்தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதைஅதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை சரி பார்த்து உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது குறித்த சுற்றிக்கையை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்ப வேண்டும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அல்லது மேல்முறையீடு செய்ய கால தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x