Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 121 தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த 121 தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையினர் கடந்த 5 ஆண்டுகளில் 300-க்கும்மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றி 1,300-க்கும்மேற்பட்ட மீனவர்களை சிறைபிடித்தனர். மீனவர்களின் பல்வேறு கட்டப்போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.

கடந்த 26.8.2018 அன்று இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொண்ட பரிந்துரையால் 2015-ம் ஆண்டு பிப்ரவரி முதல்2018-ம் ஆண்டு பிப்ரவரி வரை 3ஆண்டுகளில் அந்நாட்டுக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த173 படகுகளை விடுவிக்க அந்நாட்டுநீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதைத் தொடர்ந்து அப்படகுகளின் நிலையை அறிய தமிழக மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மீனவப் பிரதிநிதி ஜேசுராஜா தலைமையில் இலங்கை சென்ற குழு அங்கிருந்த படகுகளை ஆய்வு செய்தது. இதில்47 படகுகள் மட்டும் மீட்கும் நிலையில் இருந்தன. அதன் பிறகு அப்படகுகளை மீட்டுவர தமிழக அரசு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் 35 படகுகள் மட்டும் மீட்கப்பட்டன.

மீட்கப்படாத படகுகள் மன்னார்,யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகியமாவட்ட மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் இந்த இறங்குதளங்களை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தஇடமில்லை என புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இலங்கை மீன்வளத் துறையினரால் தொடரப்பட்ட வழக்குகள் மன்னார் மற்றும்யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 94 படகுகள், மன்னார் மாவட்டநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 27 படகுகள் எனமொத்தம் சேதமடைந்த 121 விசைப்படகுகளை அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விட யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இது குறித்து ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி ஜேசுராஜா கூறியதாவது: இலங்கை நீதிமன்றங்கள் அப்படகுகளை அழிக்க உத்தரவிட்டிருப்பது வேதனையாக உள்ளது.ஒவ்வொரு படகும் ரூ.15 லட்சம்முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலானவை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக விசைப்படகுகளை அழிக்காமல் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x