

தமிழகத்தில் திமுக – அதிமுக இடையேதான் பிரதான போட்டி. 3-வது, 4-வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்களால் நவம்பர் புரட்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 103-வது புரட்சி தினத்தையொட்டி சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
சுரண்டல் சமூகத்தை மாற்றி, மனிதனை மனிதன் அடக்கி ஆளும் கோட்பாட்டை மாற்றி, உழைப்பாளிகளை ஆட்சியில் அமர்த்திய உன்னதமான நாள் நவம்பர் புரட்சி தினம். அந்த புரட்சி தினத்தின் 103-ம் ஆண்டை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள், முற்போக்காளர்கள் கொண்டாடுகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் 3-வது அணி, 4-வது அணிக்கெல்லாம் இடமில்லை. யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். அணி என்பதை பொறுத்தவரை பாஜக - அதிமுக ஒரு அணி. அதை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து ஒரு அணி அமைத்துள்ளன. இந்த இரு அணிகளுக்குள்தான் பிரதானமான போட்டி. 3-வது, 4-வது அணிகள் களத்தில் கிடையாது. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை என்றார்.