Published : 07 Nov 2020 07:14 PM
Last Updated : 07 Nov 2020 07:14 PM

கோயில் நிலங்களில் வசிப்பவர்களும் ஏழை இந்துக்களே; அரசாணை 318-ஐச் செயல்படுத்துங்கள்: அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வேண்டுகோள்

சென்னை

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் இடங்களில் குடியிருப்பவர்களில் 99 சதவீதம் பேர் சாதாரண ஏழை, எளிய இந்துக்கள்தான், இறை நம்பிக்கையுடையவர்கள்தான் என்பதை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி நடராஜன் இன்று விடுத்துள்ள அறிக்கை

''தமிழகத்தில் பல தலைமுறைகளாக இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். பல இடங்களில் அடிமனை வாடகைதாரர்களாகவும், தனது சொந்தப் பணத்தில் வீடுகள் கட்டியும் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்குப் பட்டா கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசு 30.8.2019 அன்று அரசாணை 318-ஐ வெளியிட்டது. அதில் நீண்டகாலமாக கோயில் இடத்தில் குடியிருப்பவர்களுக்குத் தகுதி அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

இந்த அரசாணையைச் செயல்படுத்தக் கூடாது என இந்து அமைப்புகள், ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசி வந்தனர். சேலம் பாஜகவைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றார்.

அரசாணை 318-க்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரியும், இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்யச் கோரியும், தமிழக அரசும், 10க்கும் மேற்பட்ட பயனாளிகளும் தனித்தனியாக வழக்குத் தொடுத்துள்ள நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற கோயில் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட அந்த வழக்கிற்கான உத்தரவைப் பிறப்பிக்காமல் ஒட்டுமொத்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் குறித்து ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயில் இடங்கள் கோயில் பயன்பாட்டிற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மேலும், அரசாணை 318 தொடர்பான வழக்கு தற்போதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு பல்வேறு அச்சங்களைக் கோயில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு, அரசாணை 318 குறித்த வழக்கின் தீர்ப்பும் இந்த அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று நிர்பந்தம் உருவாகுமோ என்ற இயல்பான கேள்வியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று வெளியிட்ட அரசாணை 318-ஐச் செயல்படுத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கோயில் இடங்களில் குடியிருப்பவர்களில் 99 சதவீதம் பேர் சாதாரண ஏழை, எளிய மக்கள் அனைவரும் இந்துக்கள்தான், இறை நம்பிக்கையுடையவர்கள்தான் என்பதை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளம் பெருங்கோயில் - ஊனுடம்பு ஆலயம் என மனிதனையே கடவுளாக, நடமாடும் கோவிலாகக் கூறும் திருமூலர், திருமந்திரத்தை மனதில் ஏந்தி, ஏழைகளுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்க வகை செய்யும் அரசாணை 318-க்கான தடை உத்தரவுகளை நீதிமன்றங்கள் ரத்து செய்து ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்''.

இவ்வாறு சாமி நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x