காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு; காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு

காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு; காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய நாகர்கோவில் காசி மீது சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார்.

அதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி(28) என்பவர் பெண்களிடம் பழகி திருமணம் செய்வதாக பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் மீது கோட்டார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது மேலும் பல கல்லூரி மாணவியர், பெண்கள் காசி மீது தொடர் புகார் அளித்தனர். அப்போது அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையம், நேசமணிநகர், வடசேரி காவல் நிலையம் ஆகியவற்றில் வழகுப்பதிவு செய்யப்பட்டது.

காசி மீது பல வழக்குகள் இருந்ததால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பெண்களை ஏமாற்றி மோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த அவரது இரு நண்பர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

காசி மீதான பாலியல் வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை நகர்கோவில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காசி மீது சென்னையை சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி, தன்னை காசி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக காசியை 10 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீஸார் நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in