பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி; திமுக எம்எல்ஏ ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு:  அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி; திமுக எம்எல்ஏ ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு:  அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளி பயன்பாட்டில் உள்ள நிலத்தை தனியாருக்கு விற்பதை தடுக்க திமுக எம்எல்ஏ ரங்கநாதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சரஸ்வதி பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான நிலம், சிங்காரம் பிள்ளை பள்ளி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த இடத்தில் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன.

கல்வி பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட அந்த நிலத்தை, பள்ளியின் செயலாளர், தனி நபர்களுக்கு விற்பதாகவும், அவர்கள் அந்த இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டவிரோதமாக விற்பனை செய்ததை ரத்து செய்து பள்ளி நிலத்தை கல்வி பயன்பாட்டிற்கு பயன்படுத்த உத்தரவிடக்கோரியும், பள்ளி செயலாளர் மீது நடவடிக்கை கோரியும் வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, தமிழக அரசு, பள்ளி கல்வி துறை, பள்ளி நிர்வாகம் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளது. அதேசமயம், தொகுதியின் நலனுக்காக செய்துள்ள பணிகளை கூடுதல் மனுவாக தாக்கல் செய்யும்படி எம்எல்ஏ ரங்கநாதனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல பள்ளியின் முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான சிவசுப்பிரமணி என்பவர் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in