Published : 07 Nov 2020 03:45 PM
Last Updated : 07 Nov 2020 03:45 PM

விருத்தாச்சலம் சிறையில் கைதி மரணம்: 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் கைதி மர்ம மரணம் குறித்து விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள துர்கை அம்மன் கோயில் அருகே கடந்த அக்.30 அன்று இளம்பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது செயின் பறிப்பு நடந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகரைச் சார்ந்த செல்வம் என்கிற செல்வமுருகன் (39) என்பவரைக் கைது செய்தனர்.

அவரைக் கைது செய்த நெய்வேலி போலீஸார், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். செல்வமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 5) நள்ளிரவு உடல்நலக் குறைவின் காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நல்ல உடல்நிலையில் இருந்த செல்வமுருகனை அக்.28 அன்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரது கைது குறித்து தகவல் எதையும் அவரது குடும்பத்தினருக்குத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா கூறுகையில், ''நாங்கள் பல இடங்களில் என் கணவரைத் தேடினோம். ஸ்டேஷனில் விசாரித்தபோதும் தகவல் தரவில்லை. கணவர் காணாமல் போனது குறித்து புகார் அளித்தும் புகாரை ஏற்கவில்லை.

இந்நிலையில் நல்ல உடல் நிலையில் இருந்த என் கணவர் திடீர் மரணம் என போலீஸார் தகவல் தருகின்றனர். வலிப்பு நோயால் இறந்ததாகச் சொல்கின்றனர். அவருக்கு வலிப்பு நோய் இருந்ததே இல்லை. அவர் உடலை வாங்கச்சொல்லி என்னை வற்புறுத்துகின்றனர். என் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும், நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் செல்வமுருகன் மரணம் தொடர்பான தகவலை தமிழக அரசு, டிஜிபி, தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் உள்ள புலன் விசாரணைப் பிரிவு டிஜிபிக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x