குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பல்கலைக்கழகங்கள் எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பல்கலைக்கழகங்கள் எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரராக சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2019-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முதல் நிலை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றிப்பெற்றேன். நேர்முகத் தேர்வு பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் தேர்வாகவில்லை.

தமிழத்தில் அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீடு சலுகை பெற எனக்கு தகுதியுண்டு. இருப்பினும் அந்த சலுகை எனக்கு வழங்கப்படவில்லை. தொலை நிலைக்கல்வியில் படித்தவர்களுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை வழங்கப்படுகிறது.

எனவே, தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு பட்டியலுக்கு தடை விதித்து, தொலை நிலைக் கல்வி இல்லாமல் நேரடியாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அடிப்படையாக கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் - 1 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in