பொறையாறு அருகே 13 உலோக சிலைகள் கண்டெடுப்பு

பொறையாறு அருகே 13 உலோக சிலைகள் கண்டெடுப்பு
Updated on
1 min read

நாகை மாவட்டம் பொறையாறு அருகே 13 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொறையார் அருகேயுள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக நிலத்தை தோண்டும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, மண்ணுக்குள் உலோகச் சிலைகள் புதைந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த, தரங்கம்பாடி வட்டாட்சியர் ராகவன் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கோயிலுக்கு வந்து, பெரம்பூர் போலீஸார் பாதுகாப்புடன் சிலைகளை வெளியில் எடுத்து தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

110 செ.மீ. உயரத்தில் பீடத்துடன் கூடிய கிருஷ்ணர் சிலை, 23 செ.மீ. உயரத்தில் அமர்ந்த நிலையில் உள்ள 3 திருமால் சிலைகள், நரசிம்மர் சிலை, 2 ராமர் சிலைகள், பாமா, ருக்மணி, ஸ்ரீதேவி, திருஞானசம்பந்தர், ஆழ்வார், ஆஞ்சநேயர் என 13 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவைதவிர சக்கரம், திருவாட்சி, தூபக்கால் உள்ளிட்ட பூஜைப் பொருட்களும் அங்கு கிடைத்தன.

இந்த சிலைகளைப் பார்வை யிட்ட தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் வீரமணி, “முழுமையான ஆய்வுக்கு பின்னரே இவற்றின் காலம் குறித்து, தெரியவரும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in