

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாணவியின் அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாகப் பதிலளிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் வெற்றி பெற உரிய பயிற்சி எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மாதிரித் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 668 மதிப்பெண்கள் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று திருப்திகரமான முறையில் தேர்வு எழுதியுள்ளதாகக் குறிப்பிட்ட மாணவி ஸ்ரேயா, தேர்வு முடிந்த பின்பு வெளியிடப்பட்ட சரியான பதில்களைச் சரிபார்த்ததில் 720 மதிப்பெண்களுக்கு 637 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், நீட் தேர்வில் 90 கேள்விகளில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 720 மதிப்பெண்களுக்கு 252 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்ரேயா, தேர்வு முடிவுக்குப் பின்பு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் 11 கேள்விகளுக்குப் பதில் அளிக்காதது போல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் விடைத்தாள்கள் வெளியிட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதனால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவி ஸ்ரேயா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தன்னுடைய அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்ரேயா கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குத் தொடர்ந்துள்ள மாணவியின் அசல் விடைத்தாளைச் சமர்ப்பிப்பது குறித்து தேசிய தேர்வு முகமை மற்றும் சிபிஎஸ்இ வரும் செவ்வாய்க்கிழமை (நவ.9) பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.