Last Updated : 06 Nov, 2020 04:11 PM

 

Published : 06 Nov 2020 04:11 PM
Last Updated : 06 Nov 2020 04:11 PM

புதுச்சேரியில் வேலை கேட்டு ஊர்வலம்; பாஜகவினர் மீது போலீஸ் தடியடி

வேலைக் கேட்டு ஊர்வலம் நடத்தி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன்பு மலர்வளையம் வைக்க முயன்ற பாஜகவினரை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தது. இரண்டரை லட்சம் பட்டதாரிகள் புதுவை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக வேலைவாய்ப்பகம் மூலம் ஒருவருக்குக் கூட காங்கிரஸ் அரசு வேலை வழங்கவில்லை. இதனை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் கண்டன ஊர்வலம் இன்று (நவ. 6) நடைபெற்றது.

கிழக்கு கடற்கரைச் சாலை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு பாஜக இளைஞரணி தலைவர் கோவேந்தன்கோபதி தலைமை வகித்தார். மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலை, வழுதாவூர் சாலை வழியாக வேலைவாய்ப்பு அலுவலகம் நோக்கி வந்தது. அப்போது, போலீஸார் தடுப்புகளை அமைத்து கவுண்டம்பாளையம் சாலை சந்திப்பில் தடுத்தனர்.

ஊர்வலத்தில் பட்டதாரி உடையணிந்து இளைஞர்கள் வந்தனர். போலீஸார் தடுத்ததால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளைத் தள்ளிவிட்டு பாஜகவினர் வேலைவாய்ப்பு அலுவலகம் நோக்கி மலர்வளையம் வைக்க செல்ல முயன்றனர். மறுபுறும் போலீஸார் அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தனர். போலீஸாரின் எண்ணிக்கையை விட பாஜகவினர் அதிகமாக இருந்ததால் தடுப்புகளைத் தூக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். பாஜகவினர் தாங்கள் கொண்டு வந்த மலர்வளையத்தைத் தடுப்புகளைத் தாண்டி வேலைவாய்ப்பு அலுவலகம் நோக்கித் தூக்கி வீசினர். இதனைத்தொடர்ந்து பாஜகவினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x