அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகார்; வழக்குப் பதிவு கோரி மனு: டிச.17-க்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகார்; வழக்குப் பதிவு கோரி மனு: டிச.17-க்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு
Updated on
1 min read

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்புப் புகார் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி மனுதாரர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தன் மனுவில், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகச் சொத்து சேர்த்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி சத்தியநாரயணன் தலைமையிலான அமர்வு, கடந்த 1996-ம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சித் தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.க்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in