Published : 01 Oct 2015 09:07 AM
Last Updated : 01 Oct 2015 09:07 AM
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் கோயில் நுழைவு போராட்டத்துக்கு முயன்ற 117 பேர் கைது செய்யப் பட்டனர். பதற்றத்தைத் தவிர்க்க கிராமத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
சிலம்பூரில் அய்யனார், முனியப் பர், வீரனார் சாமி கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில்களில் குலதெய்வம் என்ற அடிப்படையில் ஒரு பிரிவினர் வழிபட்டு வந்தனர்.
இந்த கோயிலில் ஒரு தரப்பினர் மட்டுமே வழிபட்டு வருவதாகவும் மறுதரப்பினருக்கு வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறி தலித் மக்களுடன் இணைந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர் நேற்று சிலம் பூரில் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறி வித்தனர்.இதனால், பாதுகாப்பு பணிக்காக சிலம்பூரில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப் பட்டனர்.
கோயிலுக்கு ‘சீல்’ வைப்பு
மேலும், நேற்று அதிகாலை 3 மணி முதல் சிலம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்தார். கோயிலைப் பூட்டி அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோயில் நுழைவுப் போராட்டம் நடத்துவதற்காக போலீஸாரின் தடையை மீறி மாற்று வழிகளில் ஊருக்குள் நுழைந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் கண்.கொளஞ்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஊர் பொதுமக்கள் என 39 பெண்கள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT